பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.
மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதற்கமைய வழக்கு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்த அன்றைய தினம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் அதன் செயலாளர் சரித் கல்ஹேனா ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனுவில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் அதன் உப வேந்தர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உயர் கல்வி அமைச்சகத்தின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்திருந்தது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் தயானந்தா கொடூரமாக பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிரதிபலனாக தற்கொலை செய்துகொண்டுள்ளமை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் தயானந்த என்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை ஒழிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு பகிடிவதையால் இறந்த மாணவரின் மரணம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை ஒழிக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் 1998ஆம் ஆண்டு 20ஆம் இலக்க பகிடிவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் பகிடிவதையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பகிடிவதையால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பளிக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.








