ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் எட்டாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் பல ஏவுகணை ஏவியது.
இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சீ இஸ்ரேல் மேற்கொண்ட அணு மையங்கள் மீது தாக்குதல் என்பது “போர் குற்றம்” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

இஸ்ரேல் இராணுவம் தங்களது பதிலடி நடவடிக்கையாக ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரான் புரட்சித் துப்பாக்கிப்படை 100 க்கும் மேற்பட்ட தாக்குதலாளி மற்றும் தற்கொலை ட்ரோன்களை இஸ்ரேல் மீது செலுத்தியதாக தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, தென் இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சோரோக்கா மருத்துவமனையை ஈரான் ஏவுகணைகள் தாக்கின, இருந்தாலும் ஈரான் தாங்கள் எந்த மருத்துவமனையை தாக்கவில்லை எனவும், அதற்கு அருகில் உள்ள பகுதிக்கு வீசப்பட்ட ஏவுகணையின் சக்தி அங்கு உணரப்பட்டதாகவும் தெரிவித்தது. மேலும், தெல்அவிவ் நகரில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 240 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இசுரேல் கத்ஸ், ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமெனியை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீது நமது இலக்குகளை அடைய, அவர் உயிருடன் இருக்க கூடாது,” எனவும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஜெனிவாவில் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்து, அணுசக்தி திட்ட குறைப்புப் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். ஈரான் பேச்சுக்கு தயார் என அந்த தலைவர்களில் ஒருவர் ராய்ட்டர் செய்தி சேவைக்கு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஈரான் அதுகுறித்து பேச தமக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளது

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா தலைவர் டொனால்ட் டிரம்ப், இரண்டு வாரங்களுக்குள் ஈரானை தாக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யவுள்ளார். இருப்பினும் இந்த காலத்திற்குள் பேச்சுவார்த்தையில் சமரசம் கிடைக்கும் வாய்ப்பு இன்னும் உள்ளது எனவும், அமெரிக்கா–இஸ்ரேல் எதிர்பார்ப்பு நிறைவேறும் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, மேற்கு ஆசியா பரப்பளவில் பெரிய போர் மோதலை நோக்கி நகரும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி உள்ளது.








