வாகரை பிரதேச சபைத் தலைவராகத் தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி; அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு யார் என சலசலப்பு
மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டு, ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
அந்த மேலதிகமாக ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய அந்த கறுப்பு ஆடு யார்? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு நேற்று (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து தவிசாளரை தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடன் இலங்கை தமிழரசு கட்சி மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதித்தவிசாளருக்கு தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன், ஐக்கிய மக்கள் சத்தி கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த 7 பேரும், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் மற்றும் ஐக்கிய மக்கள் சத்தியை சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், மொத்தமாக அவர் 12 வாக்குகளை பெற்றிருந்தார்.
எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக வழங்கியது தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.








