படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. மேலும் படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் இயக்குநர் மணிரத்னம், “நானும் கமல்ஹாசனும் இணைந்து மற்றொரு நாயகனைக் கொடுப்போம் என எதிர்பார்த்தவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். மீண்டும் நாயகனுக்குத் திரும்புவது எங்கள் நோக்கம் அல்ல.
முற்றிலும் வித்தியாசமான ஒன்றை வழங்கவே நினைத்தோம். ஆனால், நாங்கள் வழங்கியதைவிட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதீதமாக இருந்தது. இதனால், தக் லைஃப் படத்தைவிட ரசிகர்கள் எதிர்பார்த்த படம் வேறொன்றாகவே இருந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. முன்னதாக கர்நாடகாவில் படத்தை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








