மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின்போது வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களுக்கு வெளியில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் குறிப்பிட்ட ஒரு வீத வருமானத்தினை பிரதேச சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று (24) பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், பிரதேச சபை செயலாளர் சுபராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அமர்வின் போது பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் ஆலயங்களில் விழா காலங்களில் மாத்திரம் வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் குறிப்பிட்ட ஒரு வீத வருமானத்தினை பிரதேச சபைக்கு வழங்குவதாக மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அத்தனை கோயில் நிர்வாகத்தினரும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க, இந்த செயற்பாட்டினை சபையின் அனுமதியோடு செய்வதற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்த்து பிரேரணை ஒன்றும் முன் வைக்கப்பட்டது.
இதன் போது பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் வாக்கெடுப்பு இடம் பெற்று, வருகை தந்த 18 நபர்களில் 10 நபர்கள் ஆதரவாகவும், ஏழு நபர்கள் எதிராகவும் ஒரு நபர் நடுநிலை வகித்தார்.
இதன் அடிப்படையில் குறித்த பிரேரணை பத்து வாக்குகள் ஆதரவுடன் வெற்றி பெற்று, ஆலய விழாக்களின் போது வாகன தரிப்பிடம் மற்றும் கடைகளினால் கிடைக்கப்பெறும் வருமானங்களில் குறிப்பிட்ட வீத வருமானத்தை பிரதேச சபை அறவிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதேச சபையில் காணப்படும் பிரேதம் ஏற்றும் வாகனத்தினை திருத்தி அமைத்து குறைந்த கட்டணத்தில் அந்த சேவையினை வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு பிரதேச சபையில் காணப்படும் ஏனைய இயங்கா நிலையில் உள்ள வாகனங்களை திருத்தி அமைத்து பிரதேச சபைக்கு தேவையான கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் மின்விளக்குகளை புதிதாகப்போடவேண்டும் எனவும் அதே நேரத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மயானங்களிலும் அதனைத் தொடர்ந்து அதிகளவில் மின் விளக்குகள் தேவைப்பாடு உள்ள பகுதிகளிலும் மின்விளக்குகளை பொருத்துவது தொடர்பாகவும் இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ்வாறு பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மக்களின் தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் நோக்கிலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது போது பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று சுமூகமான முறையில் பிரதேச சபை அமர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.








