தமிழ் மக்களுக்கு தமது மாகாணங்களையும் பிரதேசங்களையும் நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அதிகாரப் பரவலாக்கல் அவசியம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இனக்கலவரம் இலங்கை வரலாற்றில் அழியாத வடுவாக இருப்பதாக தெரிவித்த அவர், அந்த சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவர் என குறிப்பிட்டார்.
அந்த காலப்பகுதியில் தமிழர்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட வகையில் இனக்கலவரம் நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர், கொழும்பு, கண்டி, பதுளை, நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
எனினும், அச்சந்தர்ப்பத்தில் பல சிங்கள மக்கள் தமிழ் மக்களை பாதுகாத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கிய காரணம் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயம் என தெரிவித்த இராதாகிருஷ்ணன், தமிழர்கள் நாட்டைப் பிரிப்பதற்காக அல்லாது தங்களது பிரதேசங்களை நிர்வகிப்பதற்கான உரிமையையே கோருகின்றனர் என குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதற்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை காண வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனை முன்னெடுக்கக்கூடிய அரசாங்கமாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்களின் பிரச்சினைகளும் தொடர்ந்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என குறிப்பிட்ட அவர், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதி செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.








