மட்டக்களப்பின் ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த உதவி, தேசிய மக்கள் சக்தியின் நேரடி நடவடிக்கையின் பின்னணியில், வவுணதீவு பிரதேச செயலகம் மூலம் இன்று (5) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
யானை தாக்குதலில் 35 வயது தாய் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், அவரது 3 வயது குழந்தை படுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தது.
சம்பவத்திற்கு பின்னர், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாதுறை மாவட்ட பணிப்பாளரும் மட்டு மாநகரசபை உறுப்பினருமான எஸ். சுரேஸ், விபரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனை அடுத்து, உடனடி நிவாரணமாக இழப்பீட்டுத் தொகை வழங்கும் முடிவை பிரதேச செயலகம் எடுத்தது. காசோலையை, செயலக அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் உறவினர்களிடம் நேரில் சென்று வழங்கினர்.








