மட்டக்களப்பு – சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரின் தலையீட்டினையடுத்து முடிவிற்கு வந்தது.
ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடாத்துவதற்கான ஏற்பாட்டினை அடுத்த ஒரு வாரகாலத்திற்குள் செய்துதருவதாக மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பீ. பாலசிறிதர் உறுதியளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் தமது கவனயீர்ப்புப்போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கொருமுறை நடாத்தப்படும் கும்பாபிஷேகம் தற்போது நிருவாகத்தினருக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் காரணமாக பதினான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் கும்பாபிஷேகம் நடாத்தப்படாதுள்ளது. எனவே, ஆலயத்தைப் புனரமைத்து பாலஸ்தானம் நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இவர்கள் தமது கோரிக்கையினை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பீ. பாலசிறிதர் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்விடத்திற்கு வருகைதந்து போராட்டக்காரர்களுடன் பேசி உறுதியளித்ததையடுத்து பேராட்டம் கைவிடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்ததும் பிரசித்தம் பெற்றதுமான சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்படாது சுமார் பதின் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே நிருவாகம் இருந்து வருவதனால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஆலயத்தின் சேமிப்பிலுள்ள நிதியைப்பயன்படுத்த முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இங்கு பாவைகள் செயல் திறனற்றுக்காணப்படுவதுடன் சிலைகள் சேதமடைந்துள்ளன. ஆலயத்தின் வர்ணப்பூச்சுகள் பழைமையானதாகக் காட்சயளிக்கின்றன. இதனால் பக்தர்கள் கவலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இந்த ஆலயத்திற்கு உடனடியாக தற்காலிக நிருவாகம் ஒன்றை அமைத்து ஆலயத்தைப் புனரமைத்து பாலஸ்தானம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.









