ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (28) காலை ஓட்டமாவடி பாலம் அருகே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், தொலைபேசியில் பேச வேண்டுமெனக் கூறி வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார். சாரதி வண்டியை நிறுத்தியவுடன், அந்தப் பெண் திடீரென ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த இரு இளைஞர்கள், கரையில் நிறுத்தப்பட்டிருந்த தோணியைப் பயன்படுத்தி உடனடியாக ஆற்றுக்குள் சென்று பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








