முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனை துரத்தி வந்த இனந்தெரியாதோர் கொக்குதாெடுவாய் களப்பு கடலில் இருந்து 50மீற்றர் தூரத்தில் வைத்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு குறித்த இளைஞனின் அத்தானை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த இளைஞன் யாரால் கொலை செய்யப்பட்டார், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த இளைஞன் சிறந்த மரதனோட்ட வீரனாவார். வடமாகாணத்தில் பல சாதனைகளை கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








