வடகிழக்கில் ஐந்து நாட்கள் தொடர்ந்து “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான இருதயம் செல்வகுமார் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் அவர் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மனித எலும்புத் தொகுதிகள், தமிழர்கள் மீது நடைபெற்ற இனவழிப்பு குற்றச்சாட்டுகளுக்கான உயிருடன் நிற்கும் சாட்சிகள் எனக் கூறினார்.
1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி படுகொலை வழக்கு மூலம் வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி சம்பவம், 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரிலும் இடம்பெற்ற படுகொலைகளை வெளிச்சம் போட்டதாகவும், பலர் மீட்கப்பட்ட போதிலும், ஆட்சிகள் அவற்றை முறையாக விசாரிக்காமல் மூடி மறைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அண்மையில் அப்பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின் போது மீண்டும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அவற்றை அரசாங்கம் மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையிலேயே, வரும் 23ம் திகதி காலை 10 மணிக்கு செம்மணியில் தொடங்கி, ஐந்து நாட்கள் தமிழர் தாயகமெங்கும் கையொப்பப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் கோரிக்கைகளில் — செம்மணி உட்பட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் சர்வதேச விசாரணை, ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானம், இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு சர்வதேச பயணத் தடைகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு, கையகப்படுத்தப்பட்ட பாரம்பரிய வாழ்விடங்களை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், சுயநிர்ணய உரிமை மற்றும் தேச அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், நாளை (13) வீரமுனை படுகொலை நாளாகக் கொண்டாடப்படவுள்ளது. வீரமுனை பிள்ளையார் ஆலய முன்பாக மாலை 5 மணிக்கு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும். வடக்கு–கிழக்கின் அனைத்து பகுதிகளிலும் அதே நேரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்த மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு–கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்யும் போராட்டங்களுக்கு தாயக செயலணியும் தனது ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் வெற்றியடைய, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் மற்றும் மத அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், விளையாட்டு கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியுடன் பங்கேற்குமாறு தாயக செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஒவ்வொரு கையொப்பமும் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான சர்வதேச போராட்டத்தில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








