யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் நேற்று (11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டலில், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனை மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சானக டீசில்வாவின் கண்காணிப்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்ன தலைமையிலான போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு இந்த விஷேட தேடுதலை மேற்கொண்டது.
அறுகுவெளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது உடைமையில் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், அறுகுவெளி பகுதியில் பற்றைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 284 கிலோ 415 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகராகவும், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் அவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.








