அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்குமாறு கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (12) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பே. கவாஸ்கரன் தலைமையில், நேற்று பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில், அரச வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில், 1996 இற்கு பின்னைய ஓய்வூதிய கொடுப்பு முறையின் உத்தேச திருத்தங்களை உடனடியாக அமல்படுத்துதல், அரச வங்கிகளின் ஊழியர் உரிமைகள் குறைப்புக்கு எதிர்ப்பு, ஓய்வூதிய கொடுப்பனவு முறை இல்லாத அரச வங்கிகளில் அந்த நடைமுறையை நிறுத்துதல், எச்.டி.எப்.சி. மற்றும் எஸ்.எம்.ஜே.பி. வங்கிகளின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கின.
சுமார் 30 நிமிடங்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிறகு, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


















