கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.
2024 ம் ஆண்டு சர்வதேச அளவில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த வருடம் முழுவதும் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
பொலிஸாரின் பிடியிலிருந்தவேளை பலர் கொல்லப்பட்டனர். விசாரணைகளிற்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் கொண்டுசென்றவேளையிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றன.

விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் தங்களை தாக்கினார்கள் அல்லது தப்பியோட முயன்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ஏழுபேர் பொலிஸாரினால் கைதுசெய்ய்ப்பட்டிருந்தவேளை உயிரிழந்தனர் என தெரிவித்தது.
கடந்த வருடம் முழுவதும் 103 இலக்குவைக்கப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.2023 இல் இது 120 ஆக காணப்பட்டது , 2024 இல் குறைவடைந்துள்ளது.
மல்வத்துகிரிப்பிட்டிய என்ற இடத்தில் பௌத்தமதகுருவொருவரை கொலை செய்தமைக்காக முன்னாள் இராணுவ கொமாண்டோ கலகர டில்சான் என்பவர் கடந்த வருடம் மார்ச் பத்தாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக தாங்கள் அந்த நபரை அழைத்து சென்றவேளை அவர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார். பொலிஸார் திருப்பி தாக்கியவேளை காயமடைந்த அந்த நபர் வத்துபிட்டிவல மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சிவில் சமூகத்தினர் இவ்வாறான மரணங்கள் பொலிஸாரின் சட்டவிரோத படுகொலைகள் என்பதற்குள் பொருந்துகின்றன என தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பல சம்பவங்கள் காரணமாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு 2023 டிசம்பர் மாதம் பொலிஸாரிற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது.
Full report : https://www.state.gov/reports/2024-country-reports-on-human-rights-practices/sri-lanka








