யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (02) அதிகாலை சுமார் 2 மணியளவில் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மடு மாதா ஆலயத்திற்கான யாத்திரை பயணத்தை முன்னிட்டு அப்பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடிக்காமல் இருந்த நிலையில் அதனை மீண்டும் வெடிக்கச் செய்ய குறித்த இளைஞர் முயற்சித்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது எதிர்பாராத விதமாக பட்டாசு திடீரென வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








