மட்டக்களப்பில் இன்று (13) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வருகை தந்ததை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச் செயல்பாடுகள் தொடர்பில் நீதிக்கோரியும், இராணுவ வெளியேற்றத்தையும் வலியுறுத்தியும் தமிழரசுக் கட்சியின் அழைப்பின்பேரில் காந்தி பூங்காவில் காலை 9.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், “முத்தையன்கட்டு இராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்ட கபில்ராய்க்கு நீதி வேண்டும்”, “இராணுவமே வெளியேறு – வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் அமைதியாக முடிவுற்றது.

இதற்கிடையில், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மட்டக்களப்பு பழைய கச்சேரியில் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் வருகையை முன்னிட்டு நகரின் முக்கியச் சந்திகளில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















