மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்திநெத்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால, அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், இரா. சாணக்கியன், ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா மற்றும் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மென்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மட்டு–அம்பாறை விசேட அதிரடிப்படை தளபதி, மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 300 பேர் மட்டுமே பணியில் உள்ளதாக கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக கூடுதலாக 50 பொலிஸாரை மாவட்டத்திற்கு வழங்குவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.
புதிய பொலிஸ் நிலையம் அமைப்பதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் மதுபான விற்பனை நடவடிக்கைகளை ஒழிக்க விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஒவ்வொரு பொலிஸ் நிலையப் பிரிவுகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் வகையில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு வழங்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக மணல் அகழும் வாகனங்களை நிறுத்தி தேவையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதேசமயம் குறித்த பொலிஸ் நிலையத்தின் தேவைப்பாடு குறித்து அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முன்மொழிந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு என்பதும் குறிப்பிடத்தக்கது.








