தமிழ்த் தேசியத்தை எப்போதுமே ‘காத்து’ சுமப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. இராணுவ அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்கள், படுகொலைகளைக் கண்டித்து தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்த கடையடைப்புப் போராட்டத்தின் முதன்மைப் பங்காளிகளாக நின்று மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட மக்கள் இன்றும் பங்களித்திருக்கிறார்கள். அவர்கள் வழியில், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மக்களும் இணைத்திருக்கிறார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் தென் இலங்கைச் சக்திகளிடம் சரணடைந்தது போல, யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சில இடங்களில், சில தரப்பினரின் தலையீடுகளுடன் கடையடைப்புப் போராட்டம் சோபையிழந்திருக்கின்றது. ‘சுமந்திரனின் கடையடைப்பு’ என்று போராட்டத்தின் நோக்கத்தினைச் சுருக்கி, போராட்டத்தினைச் தோல்வியடைய வைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை, தமிழ்த் தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது கட்சிகள் – நபர்களுக்கானது அல்ல. அது எமது தேசத்திற்கானது, எமது இருப்பிற்கானது என்கிற அடிப்படைகளோடு எப்போதுமே தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள், கட்சி, தனிநபர் ஆதரவு – எதிர்ப்பு மனநிலைகளைக் கடந்து நின்று, இன்றைய கடையடைப்புப் போராட்டத்திலும் இணைந்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியலை சுருக்கிக் கொண்டு, தங்களை ஆதிக்க சக்திகளாக நிறுவ முயன்ற சக்திகளுக்கு மீண்டும் தமிழ் மக்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்பது யாழ். மையவாதம் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
அடிப்படை நோக்கங்களற்ற பொது வேட்பாளர் ஆதரவு நிலை, தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி என்று யாழ்ப்பாண மையவாதம் தமிழ்த் தேசத்தின் நோக்கங்களுக்கு எதிர்திசையில் ஓடிய வரலாற்றினை அண்மைய நாட்களில் பதிவு செய்திருக்கின்றது. அதன் அடுத்த கட்டத்தை பதிவு செய்வதற்காக முயன்றவர்கள் முகங்களில் தமிழர் தேசம் ஓங்கி அறைந்திருக்கின்றது.

இனி, போராட்ட அறிவிப்புக்கள் படப்போகும் பாட்டை நினைத்தால்தான், பரிதாபமாக இருக்கிறது. அதுவும், போராட்டங்களை கட்சி நிலைப்பாடுகளுடன் அணுகியவர்கள் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் ரணகளமாக இருக்கும்.
“கடையடைப்புப் போராட்டம் இல்லை” என்று கூவிக் கொண்ட அர்ச்சுனாவும், அவரது அணியினரும், அவர்களின் சகபாடிகளும், சுமந்திரன் எதிர்த்தரப்பினரும் மகிழ்ந்திருப்பதற்கான நாளாக இன்று இல்லை. அவர்களின் மனவுளைச்சல்களுக்காக வருந்துகிறேன். நோக்கங்களை மறந்து, நபர்கள் மீது போராட்ட நோக்கங்களைச் சுருக்கினால், இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்வது இயல்பானது.
இனியாவது, தனிநபர் எதிர்ப்பை, தமிழ்த் தேசிய நோக்கங்களை சிதைப்பதற்காக கையாளாதீர்கள் அன்பர்களே! ஏனெனில், இன்று நீங்களும் தேசிய மக்கள் சக்தியினரும், ஊசிக் கூட்டமும் ஒரே இடத்தில் நிற்கிறீர்கள்.








