இலங்கை போக்குவரத்துச் சபை 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதியுள்ள பேருந்துச் சேவைகளை மாற்று திட்டமின்றி இரத்து செய்ததுடன், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 11 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை இதுவரை மீளச் செலுத்தப்படாமல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, இதுவரை 4,928 பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயணத் தடவைகள் இரத்துச்செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் மாற்று பேருந்து வழங்கப்படுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், முடியாதபோது பணம் மீள வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்கள் வங்கியுடன் இணைந்து புதிய முறையில் விரைவான மீளச்செலுத்தல் திட்டம் செப்டம்பர் 1 முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
ஆனால் பயணிகளுக்கு தாமதமாக அறிவிப்பு வழங்கப்படுவதால் அவதியுறும் நிலை தொடர்கிறது எனவும், இதற்கு உடனடி கவனம் தேவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.








