மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு இன்று (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில், கடந்த 18 ஆம் திகதி வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பில், முதல்வரை தேசிய மக்கள் சக்தி (NPP) சில உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து, தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
உறுப்பினர் துரைசிங்கம் மதன், ஹர்த்தால் நாளில் முதல்வர் கடைகளை மூடுமாறு வற்புறுத்தியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விளக்கம் கோரினார். இதற்கு பதிலளித்த முதல்வர், “நான் கடைகளை மூடுமாறு கூறவில்லை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களே எனக்கு எதிராக தவறான தகவலை பரப்பினர்” என்று தெரிவித்தார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், முதல்வர் நேரடியாக ஹர்த்தாலில் ஈடுபட்டதாகவும், வர்த்தகர்களுக்கு அழுத்தம் தந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இரு தரப்பினரும் எழுந்து நின்று சுமார் அரை மணி நேரம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அமர்வில் பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் முதல்வர் உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அமரச் செய்து, அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.
















