வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்புடைய வழக்கு ஒன்றின் உள்ளடங்கள், விசாரணை முடிவதற்கு முன்னரே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்த விடயத்தில் கொழும்பு மோசடிப் பணியகத்தின் அதிகாரிகளை கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கடந்த வெள்ளிக்கிழமையன்று(22) கண்டித்துள்ளார்.
குறித்த ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் ஏன் அவசரம் காட்டவேண்டும் என்று நீதிவான் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
முழுமையடையாத ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்புவது வழக்கை தாமதப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் தேசிய தொழிலாளர் நிறுவனம் என்று அழைக்கப்படும் அமைப்புக்கு சொந்தமான கட்டிடம் தொடர்பான வழக்கு கல்கிஸ்ஸை நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தைப் பற்றியது,
தேசிய தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு, சமரசிங்க உள்ளிட்டவர்கள் மோசடியாக 3.6 மில்லியன் ரூபாய்களுக்கு குறித்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கில் அமைச்சர் சமரசிங்க மற்றும் பிறரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை,நீதிவான் செப்டம்பர் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.








