கேரளாவில் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை பொலிசார் தேடி வருகின்றனர். ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட திரைப்பட நடிகை, லட்சுமி மேனன். மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கியூட் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ச்சியாக கொம்பன், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தனது மார்கெட்டை இழந்தவர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இதற்கிடையே மீண்டும் கேரள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை லட்சுமி மேனன், தற்போது ஆட்கடத்தல் வழக்கில் காவல்துறையினர் தேடும் அளவுக்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 27 வயதே ஆன நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்களாக மிதுன், அனீஷ் உள்ளிட்டோருடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அப்போது அதே பாருக்கு மது அருந்த வந்த மற்றொரு கும்பலுக்கும், லட்சுமி மேனனின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் மாறி மாறி ஆவேசத்தை காட்ட, எதிர் தரப்பினர் பல பேர் முன்னிலையில் நடிகையையும், அவரது நண்பர்களையும் எதிர்த்து நின்றதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த நடிகையின் நண்பர்கள், பார் மூடும் நேரம் பார்த்து காரில் புறப்பட்டு சென்ற அக்கும்பலை, பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிட்டி கார்னர் இடத்தில் வைத்து அந்த காரை மறித்த நடிகையின் நண்பர்கள், அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று வலுவாக தாக்கியுள்ளனர்.

சாதாரண பிரச்சினையை பெரிதாக்கி, ஆட்கடத்தல் வரை வில்லங்கமாக்கியதுடன் அடிதடி வழக்கிலும் சிக்கும் அளவுக்கு குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ஐடி ஊழியர், அவரது நண்பர்களாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் ட்ரிட்மென்ட் எடுத்த கையோடு எர்ணாகுளம் காவல்நிலையத்திலும் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாரில் நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.








