திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடிப் படகுத்துறை பகுதியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் இந்த இடிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட நிர்மாணங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.
1981ஆம் ஆண்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உடைத்தல் உத்தரவு, சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதி இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். அரச அனுமதியின்றி அங்கு உணவகம் இயங்கி வந்ததுடன், கழிவுநீர் நேரடியாக கடலில் கலக்கும் அபாயமும் காணப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், அந்த கட்டடங்கள் கடற்காட்சியையும் மறைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை உட்துறைமுகப் பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரச நிறுவனங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








