மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் போர்ப் பதற்றம் காரணமாக, குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை இந்த இடைநிறுத்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், குறித்த காலப்பகுதியில் குவைத்துக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் தங்களது விமானப் பயண நிலைமையை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்கள் மற்றும் பயண ஆலோசனைகளை 1979 என்ற அவசர உதவி இலக்கம், +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் இலக்கங்கள் மூலமாகவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.








