சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று (30)பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலம் அருகே காணாமல் போனவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றியும் அகவணக்கம் செலுத்தியும் தொடங்கிய பேரணி, புதிய கல்லடி பாலம் வழியாக நகர்ந்து காந்திபூங்காவை அடைந்தது. அங்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களையும் நீதிக்கோரும் பதாகைகளையும் ஏந்தியவாறு உறவினர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம்; தமிழர் இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர்க்குற்றங்கள், மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத் தலைவர் திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அம்பாறை, திருகோணமலை மாவட்ட சங்க தலைவியரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் த.சுரேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
போராட்டம் முடிவில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்காக மகஜர் வாசிக்கப்பட்டது. அதில், “வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையை வெளிப்படுத்தவும், சர்வதேச சுயாதீன விசாரணையை ஆரம்பிக்கவும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
உறவினர்கள் தெரிவித்ததாவது, போர் முடிந்த பின் 16 ஆண்டுகளாகவும், 3,114 நாட்களாகவும் அவர்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “எங்கள் உறவுகள் எங்கே? என்ன நடந்தது? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

அதேசமயம் முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். அவர்களில் 21,000 க்கும் மேற்பட்டோர் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக உறவினர்கள் சாட்சியமளித்துள்ளனர். இதில் 59 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர். வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்பட்டல் என்பது தமிழர் இனப்படுகொலையின் திட்டமிட்ட தந்திரோபாயமாக இருந்து, அவர்களின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டன. போரின் முடிவிலிருந்து இன்று வரை, 350 க்கும் மேற்பட்ட உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலையை அறியாமலே மரணமடைந்துள்ளனர். எனினும், உறவினர்கள் தொடர்ந்து சர்வதேச நீதி மற்றும் விசாரணைக்காக போராடி வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொசா புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழப்பட்டன. அதேபோல், செம்மணி சித்துப்பத்தி இந்துமயானத்தில் 169 எலும்புக்கூடுகள், திருக்கேதீஸ்வரத்தில் 82 எச்சங்கள், கொக்குத்தொடுவாயில் 52 எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இவை எதுவும் இதுவரை விசாரிக்கப்படவில்லை. மேலும் வடக்கு கிழக்கில் சிங்கள இராணுவத்தால் புதைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் பல இடங்களிலும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி, சர்வதேச சுயாதீன விசாரணைக் குழுவை ஐ.நா நியமிக்க வேண்டுமென மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









