மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 11 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த உறவினரான சிறுமியின் சிறிய தந்தை ஒருவருக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில், சிறுமியின் தாயாரை பொய் சாட்சி அளிக்குமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் சிறிய தந்தையை, சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் (10) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2016ம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 6 மாத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த புதன்கிழமை (10) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அங்கு சிறுமியின் தாயார் சிறுமிக்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெற இல்லை என சாட்சியமளித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிய தந்தையார் சிறுமியின் தாயாரை பொய் சாட்சியம் அளிக்குமாறு அச்சுறுத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்த வழக்கிற்கு 22 ம் திகதி ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.








