கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலான சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரென, குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை, கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிஐடியினர் இதனைத் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட இச்சந்தேக நபர்கள், இச்சம்பவத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்களாவர். நடராசா நகுலேந்திரன் எனப்படும் ‘சிம்பு’, கதிர்காமர் தம்பி ஜெயகீசன் எனப்படும் ‘ஜெயந்தன்’ மற்றும் நிமல் தேவசுகன் எனப்படும் ‘ஜெயகாந்தன்’ ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர்.
மேலும், கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சந்தேக நபர்களை முற்படுத்திய சிஐடி, கடத்தலை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இருப்பதாகவும், அவர் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இச்சந்தேக நபர்களே கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரை கடத்தியதாக சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய, சந்தேக நபர்களை தமிழில் விசாரித்த சிஐடியினர், சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களுக்கே அவர்களின் கையொப்பங்களைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனால், சந்தேக நபர்களுக்கு தாங்கள் கையெழுத்திட்ட வாக்குமூலங்களின் உள்ளடக்கம் குறித்து எதுவும் தெரியாதென்றும், வழக்கு குறித்து தங்களுக்கு என்ன தெரியும் என்பதையும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை புலனாய்வாளர்களிடம் கூறியிருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.








