மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவின் வாகனேரி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சிக்கிய ஆறு பேருக்கு வாழைச்சேனை நீதவான் இன்று (17) தலா ரூ.50,000 வீதம் அபராதம் விதித்துள்ளார்.
இதன்படி, அனைவரும் சேர்த்து ரூ.3 இலட்சம் தொகையை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார். தண்டப்பணம் செலுத்தத் தவறினால், ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர்களுக்கு மேலதிக விசாரணை தேவையில்லை என நீதவான் தீர்ப்பளித்தார்.








