தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று (17) கிழக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இச்சவாலை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு திருத்த வேலைக்காக ரூ.43 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 216 பயனாளிகளில் 91 பேருக்கு தலா ரூ.2 லட்சம் ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக ரூ.1 இலட்சம் காசோலை இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரபு எம்.பி,
தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், தாம் மற்றும் தமது கட்சியினர் சொத்து விவரங்களை வெளிப்படுத்தி வந்திருப்பதாக கூறினார்.
வசந்த விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் பிரயோஜனத்துக்கானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

“முடியுமாயின் நாமல் ராஜபக்ச உள்பட எதிர்க்கட்சியினரும் தங்களது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தட்டும் அப்போதுதான் யார் உண்மையையும் யார் போலிச் சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர் என்பது மக்களுக்கு தெளிவாகும்” என அவர் சவால் விடுத்தார்.
அவரது கூற்றுப்படி, மக்கள் மோசடி மற்றும் சட்டவிரோத முறையில் செல்வம் குவித்தவர்களை நன்கு அறிந்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் மீது மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.


























