மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் உள்ள 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு (16) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திடீர் சுற்றிவளைப்பில் இச்சம்பவம் கண்டறியப்பட்டது.
மொத்தம் ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 52 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது 72 உணவகங்கள் சோதனையிடப்பட்டதில், 27 இடங்களில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வழக்குகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவு சமைத்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படவுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.












