மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில், கல்லூரி அதிபர் ச. கணேசமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (16) காலை சுபவேளையில் கும்பாபிஷேகத்துடன் கலைமகள் சிலை திறப்புவிழா நடைபெற்றது.
பாடசாலை நிறுவப்பட்டு 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் கலை வளர்ச்சியையும் குறிக்கும் வகையில் கலைமகளுக்கு சிலை அமைக்கப்பட்டது.
விழாவில் விசேட அதிதியாக மண்முனை வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆர். ஜெ. பிரபாகரன் கலந்து சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிலை அமைப்பதற்காக அனுசரணை செய்த நலன்புரியாளர்களுக்கும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் அதிபர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
























