ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த தமது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்சித் தடைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் தமது கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கட்சியில் இணைந்து செயற்படுவதற்கு அவர்களுக்கு கட்சியினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த தடையை நீக்குவதற்கும் உறுப்புரிமை நீக்கத்தை இரத்துச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சட்ட பின்னணியை ஆராய முன்னாள் சட்ட மாஅதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பனவின் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிடகோட்டேயிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.








