நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.







