உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணத்தை இரட்டிப்பாக்கவும் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்கவும், 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளின்படி, பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கான மொத்த வரி தற்போது 15வீதத்தில் இருந்து 18வீதமாக அதிகரிக்கப்படும்.
இலங்கையர்களுக்கான கசினோ நுழைவு கட்டணம் 50 அமெரிக்க டொலரிலிருந்து 100 அமெரிக்க டொலாக இரட்டிப்பாக்கப்படும் என்றும் கூறினார்.

1988ஆம் ஆண்டு 40 ஆம் இலக்கம் கொண்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவை சட்ட வல்லுநர்கள் குழு இறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பந்தயம் கட்டுபவர்கள் மற்றும் சூதாட்ட வணிகங்களுக்கான வரிகளை நிர்வகிக்கும் முதன்மை சட்டமாக பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டம் செயல்படும்.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








