உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நிகழ்வுகள் இன்று (20) சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றன.
இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாடு எனும் தலைப்பில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், வாகரை பிரதேச மாணவர்களுக்கான உள்ளுராட்சி வார விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. இதில், பொதுமக்கள் எவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெற முடியும், அதன் பயன்கள் என்ன என்பன குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், உள்ளுராட்சி தொடர்பான வினாக்கள் அடங்கிய பொது அறிவு வினா-விடை போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்களும் பங்கேற்ற மாணவர்களும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை, இலக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந. ஜங்கரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ம. விஜி மற்றும் சபை செயலாளர் தொ.செ.பி. குயின்ரஸ் கலந்து கொண்டனர்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், “வளமான நாடும் அழகான வாழ்க்கையும்” என்ற எண்ணக்கருவில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில், 2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை நாடு முழுவதும் உள்ளுராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், வாகரை பிரதேச சபையின் நிறைவு நிகழ்வு வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வாகரை கராச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. அமலினி மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர். எவ். றிப்கா ஷபீன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.























