மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு, இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களாக கணிதப் பாடம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலையில், வலயக் கல்வி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விழா இன்று (23) அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவை, ஆஸ்திரேலியாவில் தொழிலில் ஈடுபட்டு வரும் நகை வியாபாரி திரு. பாக்கியராசா அவர்கள் இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக வழங்கி வருகின்றார்.
மேலும், மட்/மமே/வெலிக்ககண்டி விபுலானந்தா வித்தியாலயமும், மட்/மமே/மாவலையாறு கைலான் வித்தியாலயமும் ஆசிரியர் உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றன. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவும் அதே அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு, கல்வி வளர்ச்சிக்கான இந்த முயற்சியை வரவேற்றனர்.









