பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பயணிகள் போக்குவரத்திற்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய திட்டத்தின் கீழ் 100 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அவை ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் அதிகரித்த தேவையை பூர்த்தி செய்வதோடு, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் நவீன பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கிலும் மெட்ரோ பேருந்து திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, 2026 மார்ச் 6ஆம் திகதி வழங்கப்பட்ட 100 பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தின் கீழ், அரசின் கொள்வனவு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக 50 சதவீத மீள்கொள்வனவு ஏற்பாட்டின் மூலம் மேலும் 50 தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.








