கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக கடற்றொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களையும் சமூக ரீதியான ஓரங்கட்டல்களையும் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள், விபத்துக்குள்ளானவர்கள், அல்லது வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் கல்வியில் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நிலையை மாற்றும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, சாதாரண தரம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, உயர்தர மாணவர்களுக்கு ரூ.5,000 மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.8,000 என மாதாந்திர கல்வி உதவி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.








