சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் (Women’s Corps – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (01) சாய்ந்தமருது பொலிவேரியன் கலாச்சார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
“அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி ஏ. பாத்திமா றிகாஸா ஷர்பீன் தலைமையிலேயே சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முகம்மது ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக், வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர், பல்வேறு துறை அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருதிலுள்ள 8 பாலர் பாடசாலைகள் இணைந்து நூற்றுக்கணக்கான சிறுவர்களுடன் முதல்முறையாக இத்தகைய நிகழ்வை நடாத்தியது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் பங்குபற்றலுடன் விளையாட்டுகள், நடனங்கள், வினோத உடை அணிவகுப்புகள், கதைக்கூறல், பாடல்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.






















