கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பாரம்பரிய ‘கப்’ நடும் நிகழ்வு இன்று (13) காலை நடைபெற்றது.
காலை 6.17 மணிக்கு சுபவேளையில் இடம்பெற்ற இந்தச் சடங்குடன் இவ்வாண்டுக்கான கண்டி எசல பெரஹெரா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
‘கப்’ நடும் சடங்கைத் தொடர்ந்து, நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு முக்கிய தேவாலயங்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு உள்வீதி ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ‘கும்பல் பெரஹெரா’ வீதி உலா இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் ‘ரந்தோலி பெரஹெரா’ ஆரம்பமாகவுள்ளதுடன், அதன் பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திருவிழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 28ஆம் திகதி ‘திய கெப்பீம’ (நீர் வெட்டு) சடங்கும் பகல் நேர பெரஹெராவும் இடம்பெறவுள்ளன.
சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அன்றைய தினம் மதியம் கண்டி ஜனாதிபதி மாளிகையில் தியவதன நிலமே அவர்களால் பாரம்பரிய பெரஹெரா தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இவ்வாண்டுக்கான கண்டி எசல பெரஹெரா திருவிழா அதிகாரப்பூர்வமாக நிறைவடையும்.








