“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் இன்று (06) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களால் முன்னிலை வகித்து நடத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆறுமுகத்தான், குடியிருப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி, எல்லைநகர் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 70 வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்கத்தினால் தலா ரூபா 10 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது, நாட்டில் வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டமாகும்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, செக்கலடி பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என். திலகநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் கனவை நனவாக்கியுள்ளோம்.
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் உறுதியாக செயல்படுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் நேர்மையான தலைமையின் கீழ் நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நிலைநிறுத்தம் அடைந்துள்ளது.
மக்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்” எனக் கூறினார்.
“எதிர்க்கட்சிகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்கள் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆண்டுக்குள் மக்கள் நம்பிக்கையை மீட்ட அரசாங்கமாக நாங்கள் திகழ்கிறோம்”
எனவும் தெரிவித்தார்.















