கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து நேற்று (7) அக்கரைப்பற்றில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோயில் வலயங்களின் முன்பள்ளி அபிவிருத்தி ஒன்றியங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கரைப்பற்றிலுள்ள அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணிமனைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பிய அவர்கள் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும், மகஜர் ஒன்று பாலர் பாடசாலை கல்விப் பணியகப் பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. ராசித்திற்கும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டதாவது, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பில் செயல்பட்டு வரும் தலைமைக் காரியாலயம் மாகாணத்தின் மத்திய பிரதேசமான மட்டக்களப்பில் இருப்பது புவியியல் ரீதியாகவும் வசதியானதாகவும் இருப்பதாகும்.
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் தேவைகளுக்காக மட்டக்களப்பிற்கு வருவது ஏற்கனவே சிரமமாக உள்ள நிலையில், தலைமைக் காரியாலயத்தை திருகோணமலைக்கு மாற்றுவது கூடுதல் பொருளாதாரச் சுமையும் நேரச் சிரமத்தையும் ஏற்படுத்தும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த இடமாற்றத் தீர்மானத்தை ரத்து செய்து, ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அவர்கள் மகஜரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.









