மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் முத்துநகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோது, 1972 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பின்னர் 1984 ஆம் ஆண்டில் துறைமுக அதிகார சபைக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் காணிகளில் பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த மக்களுக்கு அரசாங்கம் தற்போது சட்டவிரோத காணி என கூறுவது அநியாயம் எனவும், விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த அரசாங்கங்களின் பிழைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் விரைவாக தீர்வு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வரலாற்று உரிமையையும் மதிக்க வேண்டும்,” என்றார்.
அதேவேளை, கடந்தகாலத்தில் முத்துநகர் காணி பிரச்சினையில் மக்களுடன் இணைந்து போராடிய சில அரசியல்வாதிகள் தற்போது அமைதியாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்தார்.
“முஸ்லிம் சமூகத்தின் காணிகளை மீள வழங்கி, விவசாய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக தொடர அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும்,” என்று ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் எச்சரித்தார்.













