உலக உளநல தினத்தை முன்னிட்டு, “அபாயங்களிலும் சேவைகளுக்கான அணுகல் – பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநிலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (11) வாழைச்சேனையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று கிரான், கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களும் இணைந்து பங்கேற்றன.
வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகம் இந்நிகழ்வுக்கு அணுசரணை வழங்கியது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நடைபவனி, வாழைச்சேனை கல்குடா பிரதான வீதியை வழியாகச் சென்று சந்தைப் பகுதியை வந்தடைந்தது.
பின்னர், அங்கு உளநல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறு நாடக நிகழ்ச்சி மக்களுக்காக அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்களுக்கு போசாக்கான இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
















