கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிய நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களை கடமைக்கு அறிக்கை செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறப்படும் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்கள் தங்களது மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு அமைவாக பர்தா அணிந்து வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்களது கலாசார முறைக்கு ஏற்ப உடை அணிந்து கடமையாற்றுவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறிருக்கையில் தங்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனை தொடர்புகொண்டு வினவியபோது, அரச நிறுவனங்களில் தனிநபர்களின் விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் உரிய சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமூகமான பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், நடைமுறையில் உள்ள சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் அரச சேவை விதிமுறைகளுக்கு அமைவாக இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அத்துடன், பர்தா அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் உரிய சுற்றுநிருபங்கள் தெளிவுபடுத்தப்படுவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.







