சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி செய்தவர்கள், உரிமமின்றி மீன்பிடி செய்தவர்கள் மற்றும் உள்ளூர் நீர்நிலைகளில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 11 டிங்கி படகுகள், இரண்டு படகுகள் மற்றும் ஒரு கெப் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகர எல்லைகள், திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் பொயிண்ட், கொக்கிளாய், கதிரவெளி பொயிண்ட், புடவைக்கட்டு, ஃபவுல் பொயிண்ட், ஓட்டமாவடி, பிளாண்டன் பொயிண்ட், கல்குடா, கல்லராவ கடற்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வாகனத்துடன், கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோப்பாய் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.








