மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மற்றும் மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்ச்சித் தொடர் – 62 இல், கவிஞர் வில்சன் சுதாகரின் “ஈழத்துச் சிறை” எனும் கவிதைத் தொகுப்பு அண்மையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
நிகழ்வுக்கு, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையாற்றினார். கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியை திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பேராசிரியர் சு. சிவரட்ணம் மற்றும் கலாநிதி பிரியா ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கந்தையா தியாகராஜா தமிழ்த்தாய் வாழ்த்தினை நிகழ்த்தினார். மதுரங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் சதாசிவம் கார்த்தீபன் நூலாசிரியர் அறிமுகத்தையும், கவிஞர் றியாஸ் குரானா நூல் நயவுரையையும் வழங்கினர். மகுடம் வி. மைக்கேல் கொலின் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் லயன் ஆர். லலித்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலந்து கொண்டோருக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
ஏற்புரையும் நன்றியுரையும் நூலாசிரியர் கவிஞர் வில்சன் சுதாகர் வழங்கியதுடன் நிகழ்வின் தொகுப்பை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைப் பொதுச் செயலாளர் இரா. பிரதீஸ்காந் மேற்கொண்டார்.

























