வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், மகளிர் அணி ஒன்று ஆலய தலைவரின் சிந்தனையின் பேரில் நேற்றைய (22) கேதாரகெளரி பூசையின் இறுதி நாளான காப்புக் கட்டு நிகழ்வை முன்னிட்டு உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆலயத் தலைவர் உரையாற்றியபோது, “கோயிலும் குடும்பமும் ஒன்றே ஒரு குடும்பத்திற்கு அன்னை எவ்வளவு முக்கியமோ, ஆலயத்திற்கும் பெண்களின் பங்களிப்பு அதே அளவு அவசியமானது. இறைபணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் வடிவமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்,” எனக் கூறினார்.
மேலும் அவர், “பெண்கள் தலைமை தாங்கும் நிர்வாகத்தில் சரியான தொண்டுணர்வும் நிதி ஒழுங்கும் காணப்படும். மகளிர் அணியின் நோக்கம் ஆலய வளர்ச்சி மட்டுமல்லாது, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்த நேரங்களில் சமூக சேவைகளுக்கும் பங்காற்றுவதாகும். இதனைச் சாதிக்க எம்மிடம் ஒற்றுமையும் திறந்த மனமும் இருந்தால் போதும்,” எனத் தெரிவித்தார்.

















