முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சதாசிவம் வியாழேந்திரன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் தன்னிச்சையாக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தியமை தொடர்பில் கிடைக்கும் தகவல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத நிலையில், பெருமளவு காணிகள் கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அம்பகமுவ, வேவல்தலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கையகப்படுத்தியுள்ளார். அதற்கு அருகிலுள்ள மற்றும் ஒரு காணியில் 50 ஏக்கரை முன்னாள் லொத்தர் சபைத் தலைவர் உபாலி லியனகே கையகப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மேலும் சில அரசியல்வாதிகள் இவ்வாறு காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். அதற்கிணங்க கொத்மலை கிழக்கு பொட்டோஸ் என்ற தோட்டப் பகுதியில் முன்னாள் எம்.பி. சதாசிவம் 16 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார். தலவாக்கலை பகுதியில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 50 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மாகஸ்தொட்டை பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மூன்று இடங்களில் தலா 10 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் காணி ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ காணி வழங்கல் பட்டியலில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? அவ்வாறி ல்லாவிட்டால் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? என்று வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் நுவரெலியா மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலம் எந்த அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகபூர்வமாக காணி வழங்கப்பட்ட தகவல்கள் தற்போது காணப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை. அவ்வாறு அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும், இதுபோன்ற காணி கையகப்படுத் தல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர் பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.








