மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை மற்றும் கம்போடியாவின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒதுக்கவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் மோதல்களின் தாக்கத்தால் எந்தக் குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் சிரமப்படும் 10 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் ஆசிய அபிவிருத்தி வங்கி விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதித் திட்டத்தின் கீழ், கம்போடியாவின் ‘RISE’ பொருளாதார நிலைத்தன்மைத் திட்டத்திற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், இலங்கையின் ‘வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனும் வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் நிதியில், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்களை சமாளிக்க 100 மில்லியன் டொலர் கூடுதல் நிதியுதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துதல், பொருளாதார மண்டலங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவித்து, எதிர்கால வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் பொருளாதார மீள்திறனையும் வலுப்படுத்தும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.








